தெகிமோலாக்களின் மொழிச்சடங்குகள்
எட்டாம்புலிகேசி பரிமேலழக தெய்வச்சிலையான்.
புரட்சியின் மயர்க்கால்கள் என புலவர் புலம்பியால் அழைக்கப்பட்ட மனித சக்திகளுக்கும் அப்பாற்பட்ட மகா சக்தியாகிய பாக்கியத்தாய் தனது மூடிய விழிகளால் உலகளந்து நடந்து வந்ததைப்பற்றி 'நடையலங்காரி' எனும் நூல் "மலையே! உருண்டு வந்த சிலையே" என வர்ணித்ததையும். பச்சைராஜனின் மரணத்தை நம்பாது, அவனது பரமபத வீரபிரதாபங்களின் கனவுகளை உண்டு வாழ்ந்துவரும் தெகிமோலாக்களின் திருவிழாச் சடங்கை, கண்டதும் கண்டபடியும், கேட்டது கேட்டபடியும், நின்றும், நிமிர்ந்தும், உள்ளது உள்ளபடியும் உரைக்கலானேன்.
தனது சப்ரக்கூட மஞ்சத்திலிருந்து எழுந்து பாக்கியத்தாயானவள் தனது மனக்குழப்பத்தை வெளியிட தெகிமோலாக்கள் பாணியில் எழந்து எல்லாம் தெரிந்த தெளிவான முகபாவனையுடன் ராஜநடை நடந்து முற்றம் வழியாக மரங்களையும், செடிகொடி, தாவரவகை இனங்களையும் தலையசைக்க உத்தரவிட்டு, உத்தரவு பிரகாரம் இடதில் மூன்றும், வலதில் நாலுமாக தலையசைக்கிறதா என பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் தனது மூடிய கண்களால். ஒற்றைமரம் மட்டும் தனியனாய் வலதில் மூன்றும், இடதில் நான்குமாய் அசைந்ததுடன், அசைவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருந்தது. தனது இரட்டை விரல்கள் வழி மட்டும் பச்சைராஜன் மூலம் எண்ணவும், ஆளவும், உத்திரவிடவும் அதிகாரம் பெற்ற அவள் எண்ணிக்கை மறந்து போனதால், தனக்கு நேர்ந்து வரும் மறதியும், கனவுகளும், மரங்கள் கட்டுப்படாமல் சுயேச்சையாக இயங்குவதும் கெட்ட சகுனங்களாக்கப்பட்டன. இதன் விதி யாது? - என புரிந்து கொள்ள எல்லா புலனாய்வு நிறுவனங்களையும் அழைத்து அவள் கேட்ட செய்திகள் அவள் இதயத்தை இரண்டு கைகளில் ஏந்தியபடி தெருநெடுக ஓலமிட்டு அலறியபடி ஓடி ஆறுகளிலும், குளங்களிலும் துண்டு துண்டாக்கி தூக்கி எறிந்தன.
பாக்கியத்தாய் தனது மரத்துப்போன முறம்போன்ற முகத்தை ஆட்டியபடி விட்ட பெருமூச்சானது ஒரு பிரளய முன்மாதிரியைப்போல சுழன்றடித்து பல குடிசைகளை எரித்ததாகவும், அப்பெருமூச்சின் தீயில் தன் உடல்பட்ட புல்லரிப்பில் நெருப்பில் விழுந்து நிறைய தெகிமோலாக்கள் இருந்ததாகவும், அப்படி சாவது மோட்சமாகவும் கருதப்பட்டது என "பாக்கியத்தாயின் பெருமூச்சில் பெற்ற தெகிமோலாக்களின் மோட்சம்" என்கிற நூல் விளக்குவதாக கிரிம்ஸோன் என்கிற ஆய்வாளர் குறிப்பிடுகிறார். அவளது கோபமாகப்பட்டது தரைகளின் குதித்து மூர்க்கம் பெற்று சுற்றி நின்ற பணிப்பெண்களை தூக்கி சுவற்றில் அடித்து ஒட்டிக் கொண்டிருந்தது. அப்பொழுது, பணிப்பெண்களின் கண்களில் சுவற்றில் அறையப்பட்ட ஒவ்வொருவரும் பச்சைராஜனுடன் நெருக்கமுற்று சலனித்து, அவனால் சுவற்றிலிருந்து உரித்து எடக்கப்படுவதான கனவுகளில் லயித்து தன்னை மறந்து நின்ற வேளையில், பாக்கியததாயின் கட்டளை ஒன்று அம்பாக பறந்து வந்து அத்தனைப் பணிப்பெண்களையும் ஒருசேரக் குத்திக்கொண்டு பறந்து, குடமுழுக்கின் போது பாக்கியத்தாயை ஒரு சிறுதேர் உருட்டும் பாலமினாவாய பாவித்து அவளது பாரிய தேகத்தை குளிப்பாட்டிவிடும் பேறுபேற்றவலும் அவளின் உயிரை தனது ரகசிய குகைகளுக்குள் பாதுகாத்து வருபவளுமான தோழியை அழைக்க அவளது வீட்டின் முன்போய் அத்தனை பணிப்பெண்களுடன் விழுந்தது.
மந்திராலோசனை அறைக்குள் நுழைந்த தாயும், தோழியும் பல யுகங்கள் கழித்தே வெளிவருவதற்கான நிறைய ரகசிய 'ஆச்சர்யங்களின் அபிநய உலா'-என்ற பெயரில் உலவிவந்த அத்தேசத்தின் கதைகள் அரசக்கட்டளை ஒன்றின் மூலம் தடை செய்யப்பட்டபின் காற்றிலும் கடிதாய் பரவி தெகிமோலாக்களின் ரகசியங்களை பாதுகாக்கும் அறைகளுக்குள் பதுக்கப்பட்டது. இருப்பினும், பாக்கியத்தாய் உருவாக்கிய ஆச்சர்யங்களை சுவாசித்து வாழும், இரண்டக மனம் கொண்ட தெகிமோலாக்கள் அக்கதைகளை உள்ளூர ரசித்து பாதுகாத்து வந்தது ஒன்றும் ஆச்சர்யமில்லை. அக்கதைகளில் ஒன்று 'மந்திராலோசனை மர்மங்கள்' என்ற பெயரில் உலவுவதாகவும், அதில் அவ்வறைபற்றிய வர்ணனையில், பாக்கியத்தாய் தனது சிரிப்பையும், சந்தோஷத்தையும் இரண்டு விதானங்களாக்கி ஒன்றை தரையில் விரித்தும் மற்றொன்றை கூரையிலும் தொங்கவிட்டிருந்தாள். மையத்தில் உள்ள மஞ்சத்தில் தன் இளம் வயதை ஒரு மெத்தையாக்கி விரித்து அதன் மீது தனது செளந்தர்யங்களை தூவி அதில் தானும், தன் தோழியுமாய் உறங்கும் வேளைகளில் சுற்றிலும் நிறைய தெகிமோலாக்களின் இன்பக்கதைகளை காட்சியும், வர்ணனையுமாய் காட்டும் மாயக்கண்ணாடிகளை பதித்து வைத்திருந்தாள். கனவுகளும், நினைவுகளும் குழைத்துக் கட்டப்பட்ட நீச்சல் குளம் ஒன்றும் அமைத்து அதில் யுகக்கணக்கில் நீந்தி தனது உடலினை இளமை ததும்பும் நீர்ப்பையாக ஆக்கி ஆரோக்கியத்தை காத்துவந்தாள். அவ்வறையைச் சுற்றி யாரும் நுழையா வண்ணம் தெகிமோலா தெய்வீக ஆணை ஒன்றை காவலுக்கு நிறுத்தி கடுமையாக காத்து வந்தாள்.
தனது உயிர்த்தோழியின் ஆலோசனைப்படியும், புலன் ஆய்வினரின் கருத்துப்படியு் ஒருநாள், சின்ன வாக்கியங்களை மட்டுமே பேசவும், எழுதவும் திட்டம் செய்த தனது அரசக்கட்டளை மீறப்பட்டு தனது வாயில் அவளை அறியாமல் வந்துவிட்ட தெகிமோலா மொழியின் நீண்ட வாக்கியம் ஏற்படுத்திய குழப்பத்தையும் யோசித்து, சமீபமாக நடந்துவரும் கருணாகரத் தொண்டமானின் நீண்ட, நீண்ட வாக்கிய உற்பத்திகள் மக்களின் நினைவுகளையும், கனவுகளையும் மாற்றிவிடக்கூடிய சதிக்கு எதிராக தெகிமோலா மொழியின் பாரம்பரியச் சடங்கை செய்து மீண்டும் தனது அதிகாரத்தின் சொப்பன சுகங்களை நிலைநாட்டிவிடும் என்று முடிவு செய்யப்பட்டது.
மண்ணும், வின்னும் கேட்க உலக தெகிமோலா மொழி அறிஞர்களை கூட்டி தனக்கு சொந்தமற்ற மொழி என்கிற நினைவை உருவாக்கிவிடும் தனக்குப் புரியாத தெகிமோலாவின் நீண்ட பழம் வாக்கியங்களுக்கு எதிராக தெகிமோலாவின் மொழிச்சடங்கு விழா எடுப்பு, அரசு நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டபோது கருணாகரத் தொண்டைமானின் நிழல் ஒன்று செத்து விழுந்துவிட்டதாகவும் அதனை அனாதையாக புதைக்கும் அவலம் பற்றியும் செய்திகேட்டு, தான் நடத்தும் சடங்கை நினைத்து அகமகிழ்ந்திருந்தாள் பாக்கியத்தாய்.
திட்டப்பிரகாரம் ஜோதிடர்கள் குறித்தும், பாக்கியத்தாயின் செயல்களுக்கு பரிபூரண அனுமதி வழுங்கும் உரிமை பெற்ற பாஞ்சியார் பீடச்சாமிகளின் அருள்வாக்கை தெகிமோலாவிற்கு எதிரான பூர்வீக மொழியில் பெற்று சிறப்பாக பழந்தலைநகர் ஒன்றில் துவக்கி வைத்தாள் பாக்கியத்தாய். அத்தலைநகரை அடைய அவளுக்கென்று ரகசிய சுரங்க வழிகள் அமைக்கப்பட்டன. அவ்வழிகளில் காற்றோடு காற்றாய் கலந்து மறைந்து விழா நகர் அடையும் மார்க்கம் செய்யப்பட்டிருந்தது. பாதாளங்களில் பழம் கழிவுநீர் வடித்தடங்களையும். மேலே உயர் கோபுரங்களையும் கொண்ட அந்நகர், சடங்கை நடத்தவும், உலக தெகிமோலா அறிஞர்கள் கூடவும் என பல பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டன. அறிஞரின் பெயராலும், தெகிமோலா பண்பாட்டை நெருக்கமாய் அறியும் பொருட்டும் வந்த தெகிமோலா அல்லாதோருக்கும் நிறைய வசதிகளும், தேசத்தைச் சேர்ந்த தெகிமோலாக்களுக்கென மலிவுவிலை சோற்றுப் பட்டையும், சின்ன சின்ன ஆசைகளால் வடிவமைக்கப்பட்ட கனவுகளும் வழங்கப்பட்டன.
பாக்கியத்தாய் நம்பும் தனது உயிர் பறிப்பு ரகசியத்தை கடத்திவிட்டதான அண்டைதேச தெகிமோலாக்களையும், அவர்தம் தேசத்தையும் இச்சடங்கின் மூலம் பழி தீர்த்து அதுபற்றிய நினைவுகளை ஒரே நாளில் உள்ளூர் தெகிமோலாக்களின் நினைவுகளிலிருந்து அழித்து விடவும், 'உலக தெகிமோலா ஏகப்பிரம்ம பராக்கிரமி' என்கிற மகுடத்தை சூடிக்கொண்டாள். ஆண்டாண்டுகளுக்கு தெகிமோலாவின் வரலாற்றை தலைகீழாக்கி அதன் உச்சியில் ஏறி ஊளையிட்டு மகிழும் அதிகாரத்தையும் பெற்றுக்கெர்ண்டாள். தனது அண்டைதேசத்தின் வரைபடத்தை அழித்து அதன் தெகிமோலா இணைப்பை உலக அளவில் துண்டிக்கும் மார்க்கமாக அந்நாட்டு அறிஞர் பெருமக்களை அழைத்து தனது சிறைக்கதைகளைக் கூறினாள். அவர்களுக்கு தனது உயிரின் ரகசியக்கதை தெரியும் என்பதால் அவர்களை திரும்ப அனுப்பிவைப்பதன் மூலம் - தெகிமோலாவா? பாக்கியத்தாயா? யாருக்கு இச்சடங்கு என தெகிமோலாக்களின் நினைவுகளில் தனது உயிரின் அதிமுக்கியத்துவத்தையும், அதிகாரத்தையும் உள்ளீடாகச்சொறுகி மொழியைவிட தானே பெரிது என நிறுவிக் கொள்வதுமாக இச்சடங்கு துவங்கியது.
'இதன்மூலம் தெகிமோலாக்களின் பண்பாட்டில் மாபெரும் மாற்றம் ஒன்றை தாயானவள் சாதித்துவிட்டாள், அதாவது இனி தெகிமோலாக்கள் மாப்பிள்ளை இன்றியே திருமணம் செய்து கொள்ளலாம், கணவன் இன்றியே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். பல நிறங்களில் எழுதப்பட்ட வெள்ளைக் காகிதமே கன்னிப் பெண்ணிற்கான நல்ல உதாரணம் என இலக்கிய மாற்றங்களைக் கூடச் செய்தது' என்று இச்சடங்கில் கலந்துகாண்ட பிரஞ்சு நவீன பேராசிரியர் ஊடகப்பிறப்பு எரிமோலா அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.
இச்சடங்கின் வழமைப்படி, முதல்நாள் தெகிமோலா மொழியை, முடிந்தால் திருமணம் செய்தோ அல்லது இரவுநேர இருட்டுக்களில் கூட்டியோ, கழித்தோ வாழவைத்துவரும் பெரும்புலவர்கள் தங்களது பழம்புரவிகளில் ஏறி கையில் சிற்றிடைத்தவழ தங்களது மொழிக்கன்னிகளை தூக்கிக்கொண்டு பாக்கியத்தாய் நாமாவளி பஜனையை பாடித் துவங்கி வைத்தார்கள். நடுநாயகமாக அமர்ந்து தெகிமோலாவின் மொழித்தெறிப்புகளை விழுங்கி வீங்கத் துவங்கினாள் தாயானவள். இவ்வீக்கமே சடங்கை சரியான திசையில் நடத்திச் செல்வதற்கான சகுனமாகும் என்பதை உணர்ந்தே, தலைமைப் பூசாரியாக தாயால் நியமிக்கும் பாக்கியம்பெற்ற சோமா பயலிவான் முன்னேற்பாடாக இதனை செய்திருந்தார். அதன்பின் அறிஞர்கள் தங்களது கைகளில் மொழியால் ஆன வாளும், வில்லும், அம்பும், ஏ.கே. 47-ம் ஏந்தியோ அல்லது பூவோ, செடியோ, மண்ணோ, கல்லோ, 'கம்யூட்டர் டிஸ்கோ' ஏந்தி குரவை ஆடியபடி தாயை சுற்றிச்சுற்றி வரவேண்டும். இந்த நான்கு நாள் சுற்றலில் தெகிமோலாக்கள் அனைவரும் 'தாயே! தாயே!' என அலறி மயக்கம்போட்டு விழுந்து கொண்டிருக்க வேண்டும் அதுவே சடங்கிற்கு கிடைத்த தெய்வ சம்மதமாகும். இதனிடையே தெகிமோலா பண்பாட்டை விளக்கும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்கள் ஒருபுறமும் நவின 'புஸ் புஸ்' உணவுப் பண்டங்கள் ஒருபுறமுமாக நடந்த இசச்டங்கை சிலப்பதிகார ஆயர் இடைச்சேரியின் குரவைக் கூத்துடன் ஒப்பிடுகிறார் ஒரு தெகிமோலா புலவர்.
இறுதிநாள் - அன்றுதான் சடங்கின் உச்சநிலை எய்தப்படுகிறது. அதற்கென பிரத்யேக மணிமண்டபங்களும், கூடகோபுரங்களும் கட்டப்பட்டு எந்தவித தீட்டு தொடக்கு அனாச்சாரங்களும் இல்லாமல் குளித்துமுழுகி காலைப்பனிப்போல், தும்பைப் பூப்போல் தூய்மையாய் எல்லோரும் மண்டபத்தை அடைந்து சிறப்பாக அழைக்கப்பட்ட அந்நிய தேச ஆட்சியாளர்கள் எல்லோரும் ஒன்று கூடி நிற்க நடுவில் அன்று மலர்ந்த மலராய், தாமரையில் வீற்றிருக்கும் சரசுவதியாய் (வர்ணனை அனைத்தும் பாக்கியத்தாய் நாமாவளி பஜனையில் கிடைத்தவை) உலகை உய்விக்கும் மகாசக்தி சொரூபமாய், தனது விரிவடையும் பிரபஞ்சக் கோட்பாட்டின் யதார்த்த உருவாய் உள்ள நவீன தாய் தெய்வமான பாக்கியத்தாய் ஒரு உயர்ந்த ஆசனத்தில் வீற்றிருக்க தெகிமோலாக்கள் அனைவரும் நெருக்கியடித்துக்கொண்டு செத்துக்கொண்டிருக்க, சடங்கு தன் இறுதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. தாயின் முன் சிறிய தெகிமோலா அச்சரங்களை அடிப்பாகமாகவும், 3000 வருட சரித்திரத்தை வளைத்தும், இலக்கியங்களை வாய்ப்பகுதியாகவும் கொண்டு செய்யப்பட்ட கூஜா ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் அறிஞர்கள் ஒவ்வொருவரும் தங்களது பெயர்களை எழுதிப்போட்டும், தெகிமோலாக்கள் ஒவ்வொருவரும் தங்களது நினைவுகள் அத்தனையும் அழிக்கப்பட்டு தாய் ஒன்றையே மனதில் நிறுத்தி சுற்றிச்சுற்றி மந்திர ஆட்டம் ஆடி தங்களது வலிநிறைந்த மூளைகளை பிய்த்து அக்கூஜாவிற்குள் போட்டபடியும் நகர்ந்து கொண்டிருந்தனர். ஆச்சர்யங்களில் எல்லாம் ஆச்சர்யம் அக்கூஜா அத்தனை மூளைகளையும் தனது வாய்க்குள் புமியை உண்ட கண்ணனைப் போலவும், கடல் நீர் அத்தனையும் குடித்த அரக்கனைப் போலவும் அமைதியாக இருந்ததாக சமீபத்திய உக்கிரநல்லூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருப்பதாக டோக்ரிஸிய அய்வாளர் குறிப்பிடுகிறார்.
இக்கூஜாவில்தான், தெகிமோலாக்கள் நம்பும் அம்மொழியை, உயர்ந்த இடத்தின்மீது அமர்ந்து தொலைத்தொடர்பு காட்சிகாண் எந்திரம்மூலம் பரமசிவ-பார்வதி திருக்கல்யாண வைபவத்தை பார்த்துக்கொண்டே உருவாக்கிய ஒன்றரையடி முனி தனது கைகளில் ஒரு ஆற்றை நிரப்பி வைத்திருந்ததாகவும் அதன்பின் தெகிமோலாவின் மீது பற்றுக்கொண்ட காகம் ஒன்று அதனை தட்டிவிட்டதாகவும் சிலவேளை அக்காகம் நதி உற்பத்தி ஸ்தானத்தைச் சேர்ந்த பாக்கியத்தாயாகவும் இருக்கலாம் எனவும் பழஞ்சுவடிப் புராணங்கள் வழியாகவும், வாய்வழியாகவும் சொல்லப்பட்டுவரும் ஒரு கதை ஒன்று நிலவி வருகிறது அத்தேசத்தில்.
சடங்கின் இறுதி நடவடிக்கையாக, அக்கூஜாவை அறிஞர்கள் அனைவரும் ஆளுக்கொரு கையாகத் துக்கி பாக்கித்தாயகப்பட்டவளின் வாயில் வைத்து விழுங்கும்படி செய்தனர். அதனை விழுங்கிய தாய் ஒருபெரும் ஏப்பத்தின் மூலம் மொத்த தெகிமோலாக்களின் மோட்சத்தையும், நல்வாழ்வையும், அம்மொழியின் எதிர்கால, நிகழ்கால, இறந்தகால கதிகளையும் தீர்மானித்து கதிமோட்சமடையச் செய்தாள். இவ்வாறாக, தனக்கு எதிரான பில்லி, சூன்ய, கெட்ட ஆவிகள் மற்றும் எதிரிகள், வேண்டப்படாதவர்கள் ஆகியோரின் சாம்ராஜ்யத்தை முறியடித்து தெகிமோலா மூதாதைகளின் பலம்பெற்று இன்னும் நீண்ட நாட்கள் ஆளும் வலுபெற்றாள். தெகிமோலா மொழி மறக்கடிக்கப்பட்டதை ஒப்பிட இச்சடங்கு உருவாக்கும் மயக்கத்தின் ஆற்றலை கணக்கிட்ட பிறகு இறுதிநாள் அன்று மொத்த தெகிமோலாக்களும் தாயால் எழுப்பப்பட்டு மீண்டும் புதிதாய் பிறந்தமேனிக்கு அனுப்பப்படுவார்கள். இனி அவர்களுக்கு நீண்ட நீண்ட வாக்கியங்கள் புரியாது, சின்ன சின்ன வாக்கியங்கள் எல்லாவற்றிலும் தாயின் பெயர் ஒட்டு இருப்பவையே புரியும். இச்சடங்கு இனிதாக நடைபெற்றதை கேட்ட கருணாகரத் தொண்டமானின் இருந்த ஒரு நிழலும் செத்து விழந்தது. அதன் சாவில் பிறந்த சத்தமானது இவ்வாறாக இருந்தது, ”மானமுள்ள தெகிமோலாக்களுக்கு மாபெரும் தலைக்குனிவு”.
கேளும்! வாசகரே! இப்படியாகத்தான் தெகிமோலாக்களின் மொழிச் சடங்குகளை நடத்தி பலம்பெற்ற ஆளும் மார்க்கத்தின் வரலாறு நடைபெற்றுவருகிறது. நீயும், நானும்தானே இதன் நித்திய சாட்சிகள். அம்மார்க்கம் தப்ப ஒரு வழிகூறும் அய்யா! இல்லாவிட்டால் எனக்கு எதிராக, பிடிக்காதவனைப்பற்றி வரலாற்றை திருப்பி எழுதி காழ்ப்புணர்ச்சி தீர்ப்பதாக புகழ்பெற்ற தெகிமோலா வசனத்தை பொழியாதீரும். கூறும் வாசகரெ! எங்கே போனது நமது கூறுகள்? வரலாற்றின் சாட்சிகளாய் ஆகிப்போன அவலத்தைப் பாரும். எமக்கு பிடிக்காவிட்டால் நீர்! வரலாற்றைக்கூட மாற்றுவீர். அல்லது வரும் ஆய்வாளனை திருப்பி அனுப்பும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர். இரும் இரும் ஒருநாள் வரும்... என்று 3000 வருடமாய் காத்திரும்.
வாசகா! ஏற்கனவே, தெகிமோலா சரித்திரத்தை தமிழவனின் “சரித்திரத்தில் படிந்த நிழல்களில்“ படித்திருக்காவிட்டால், வரலாற்றில் அக்கறையும், வாய்ப்பும் இருந்தால் இனியாவது அதை படி.. இக்கதையை கேட்டும், படித்தும், சொல்லியும் சுகப்பட்டு தொலைந்தால் அனைவருக்கும் எட்டு யானைபலம்கூடி, இரவில் குஷ்பு பங்குபெறும் கனவு ஒன்று “ஆண்டவன்“ ஆள்பவன் ஆளப்போகிறவன் அருளால் கிடைக்க அருள் புரிவதாகுக! ஆமின்.
- காலக்குறி. (காலம்-1 குறி-5) ஜனவரி-95.
'மனக்கோட்டையின் அலைவுறும் மனித உடல்கள்' எனும் தலைப்பில் ஜமாலன், நவீன தமிழ்ச் சிறுகதையில் மெளனி பதித்த தடங்களின் புனைவு வெளியின் வாசிப்புச் சாத்தியங்களை, வாசிப்பின் அரசியலை முன் வைத்துச் செல்கின்றார். நமது வாசிப்பின் மீதான ஓர் மறு வாசிப்பைக் குறுக்கீடாக நிகழ்த்தி விடுகின்றார்.


