Thursday, January 8, 2009

தெகிமோலாக்களின் மொழிச்சடங்குகள்

தெகிமோலாக்களின் மொழிச்சடங்குகள்

எட்டாம்புலிகேசி பரிமேலழக தெய்வச்சிலையான்.

image1 புரட்சியின் மயர்க்கால்கள் என புலவர் புலம்பியால் அழைக்கப்பட்ட மனித சக்திகளுக்கும் அப்பாற்பட்ட மகா சக்தியாகிய பாக்கியத்தாய் தனது மூடிய விழிகளால் உலகளந்து நடந்து வந்ததைப்பற்றி 'நடையலங்காரி' எனும் நூல் "மலையே! உருண்டு வந்த சிலையே" என வர்ணித்ததையும்.  பச்சைராஜனின் மரணத்தை நம்பாது, அவனது பரமபத வீரபிரதாபங்களின் கனவுகளை உண்டு வாழ்ந்துவரும் தெகிமோலாக்களின் திருவிழாச் சடங்கை, கண்டதும் கண்டபடியும், கேட்டது கேட்டபடியும், நின்றும், நிமிர்ந்தும், உள்ளது உள்ளபடியும் உரைக்கலானேன்.

தனது சப்ரக்கூட மஞ்சத்திலிருந்து எழுந்து பாக்கியத்தாயானவள் தனது மனக்குழப்பத்தை வெளியிட தெகிமோலாக்கள் பாணியில் எழந்து எல்லாம் தெரிந்த தெளிவான முகபாவனையுடன் ராஜநடை நடந்து முற்றம் வழியாக மரங்களையும், செடிகொடி, தாவரவகை இனங்களையும் தலையசைக்க உத்தரவிட்டு, உத்தரவு பிரகாரம் இடதில் மூன்றும், வலதில் நாலுமாக தலையசைக்கிறதா என பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் தனது மூடிய கண்களால். ஒற்றைமரம் மட்டும் தனியனாய் வலதில் மூன்றும், இடதில் நான்குமாய் அசைந்ததுடன், அசைவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருந்தது. தனது இரட்டை விரல்கள் வழி மட்டும் பச்சைராஜன் மூலம் எண்ணவும், ஆளவும், உத்திரவிடவும் அதிகாரம் பெற்ற அவள் எண்ணிக்கை மறந்து போனதால், தனக்கு நேர்ந்து வரும் மறதியும், கனவுகளும், மரங்கள் கட்டுப்படாமல் சுயேச்சையாக இயங்குவதும் கெட்ட சகுனங்களாக்கப்பட்டன. இதன் விதி யாது? - என புரிந்து கொள்ள எல்லா புலனாய்வு நிறுவனங்களையும் அழைத்து அவள் கேட்ட செய்திகள் அவள் இதயத்தை இரண்டு கைகளில் ஏந்தியபடி தெருநெடுக ஓலமிட்டு அலறியபடி ஓடி ஆறுகளிலும், குளங்களிலும் துண்டு துண்டாக்கி தூக்கி எறிந்தன.

பாக்கியத்தாய் தனது மரத்துப்போன முறம்போன்ற முகத்தை ஆட்டியபடி விட்ட பெருமூச்சானது ஒரு பிரளய முன்மாதிரியைப்போல சுழன்றடித்து பல குடிசைகளை எரித்ததாகவும், அப்பெருமூச்சின் தீயில் தன் உடல்பட்ட புல்லரிப்பில் நெருப்பில் விழுந்து நிறைய தெகிமோலாக்கள் இருந்ததாகவும், அப்படி சாவது மோட்சமாகவும் கருதப்பட்டது என "பாக்கியத்தாயின் பெருமூச்சில் பெற்ற தெகிமோலாக்களின் மோட்சம்" என்கிற நூல் விளக்குவதாக கிரிம்ஸோன் என்கிற ஆய்வாளர் குறிப்பிடுகிறார். அவளது கோபமாகப்பட்டது தரைகளின் குதித்து மூர்க்கம் பெற்று சுற்றி நின்ற பணிப்பெண்களை தூக்கி சுவற்றில் அடித்து ஒட்டிக் கொண்டிருந்தது. அப்பொழுது, பணிப்பெண்களின் கண்களில் சுவற்றில் அறையப்பட்ட ஒவ்வொருவரும் பச்சைராஜனுடன் நெருக்கமுற்று சலனித்து, அவனால் சுவற்றிலிருந்து உரித்து எடக்கப்படுவதான கனவுகளில் லயித்து தன்னை மறந்து நின்ற வேளையில், பாக்கியததாயின் கட்டளை ஒன்று அம்பாக பறந்து வந்து அத்தனைப் பணிப்பெண்களையும் ஒருசேரக் குத்திக்கொண்டு பறந்து, குடமுழுக்கின் போது பாக்கியத்தாயை ஒரு சிறுதேர் உருட்டும் பாலமினாவாய பாவித்து அவளது பாரிய தேகத்தை குளிப்பாட்டிவிடும் பேறுபேற்றவலும் அவளின் உயிரை தனது ரகசிய குகைகளுக்குள் பாதுகாத்து வருபவளுமான தோழியை அழைக்க அவளது வீட்டின் முன்போய் அத்தனை பணிப்பெண்களுடன் விழுந்தது.

மந்திராலோசனை அறைக்குள் நுழைந்த தாயும், தோழியும் பல யுகங்கள் கழித்தே வெளிவருவதற்கான நிறைய ரகசிய 'ஆச்சர்யங்களின் அபிநய உலா'-என்ற பெயரில் உலவிவந்த அத்தேசத்தின் கதைகள் அரசக்கட்டளை ஒன்றின் மூலம் தடை செய்யப்பட்டபின் காற்றிலும் கடிதாய் பரவி தெகிமோலாக்களின் ரகசியங்களை பாதுகாக்கும் அறைகளுக்குள் பதுக்கப்பட்டது. இருப்பினும், பாக்கியத்தாய் உருவாக்கிய ஆச்சர்யங்களை சுவாசித்து வாழும், இரண்டக மனம் கொண்ட தெகிமோலாக்கள் அக்கதைகளை உள்ளூர ரசித்து பாதுகாத்து வந்தது ஒன்றும் ஆச்சர்யமில்லை.  அக்கதைகளில் ஒன்று 'மந்திராலோசனை மர்மங்கள்' என்ற பெயரில் உலவுவதாகவும், அதில் அவ்வறைபற்றிய வர்ணனையில், பாக்கியத்தாய் தனது சிரிப்பையும், சந்தோஷத்தையும் இரண்டு விதானங்களாக்கி ஒன்றை தரையில் விரித்தும் மற்றொன்றை கூரையிலும் தொங்கவிட்டிருந்தாள்.  மையத்தில் உள்ள மஞ்சத்தில் தன் இளம் வயதை ஒரு மெத்தையாக்கி விரித்து அதன் மீது தனது செளந்தர்யங்களை தூவி அதில் தானும், தன் தோழியுமாய் உறங்கும் வேளைகளில் சுற்றிலும் நிறைய தெகிமோலாக்களின் இன்பக்கதைகளை காட்சியும், வர்ணனையுமாய் காட்டும் மாயக்கண்ணாடிகளை பதித்து வைத்திருந்தாள். கனவுகளும், நினைவுகளும் குழைத்துக் கட்டப்பட்ட நீச்சல் குளம் ஒன்றும் அமைத்து அதில் யுகக்கணக்கில் நீந்தி தனது உடலினை இளமை ததும்பும் நீர்ப்பையாக ஆக்கி ஆரோக்கியத்தை காத்துவந்தாள்.  அவ்வறையைச் சுற்றி யாரும் நுழையா வண்ணம் தெகிமோலா தெய்வீக ஆணை ஒன்றை காவலுக்கு நிறுத்தி கடுமையாக காத்து வந்தாள்.

தனது உயிர்த்தோழியின் ஆலோசனைப்படியும், புலன் ஆய்வினரின் கருத்துப்படியு் ஒருநாள், சின்ன வாக்கியங்களை மட்டுமே பேசவும், எழுதவும் திட்டம் செய்த தனது அரசக்கட்டளை மீறப்பட்டு தனது வாயில் அவளை அறியாமல் வந்துவிட்ட தெகிமோலா மொழியின் நீண்ட வாக்கியம் ஏற்படுத்திய குழப்பத்தையும் யோசித்து, சமீபமாக நடந்துவரும் கருணாகரத் தொண்டமானின் நீண்ட, நீண்ட வாக்கிய உற்பத்திகள் மக்களின் நினைவுகளையும், கனவுகளையும் மாற்றிவிடக்கூடிய சதிக்கு எதிராக தெகிமோலா மொழியின் பாரம்பரியச் சடங்கை செய்து மீண்டும் தனது அதிகாரத்தின் சொப்பன சுகங்களை நிலைநாட்டிவிடும் என்று முடிவு செய்யப்பட்டது.

மண்ணும், வின்னும் கேட்க உலக தெகிமோலா மொழி அறிஞர்களை கூட்டி தனக்கு சொந்தமற்ற மொழி என்கிற நினைவை உருவாக்கிவிடும் தனக்குப் புரியாத தெகிமோலாவின் நீண்ட பழம் வாக்கியங்களுக்கு எதிராக தெகிமோலாவின் மொழிச்சடங்கு விழா எடுப்பு, அரசு நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டபோது கருணாகரத் தொண்டைமானின் நிழல் ஒன்று செத்து விழுந்துவிட்டதாகவும் அதனை அனாதையாக புதைக்கும் அவலம் பற்றியும் செய்திகேட்டு, தான் நடத்தும் சடங்கை நினைத்து அகமகிழ்ந்திருந்தாள் பாக்கியத்தாய்.

திட்டப்பிரகாரம் ஜோதிடர்கள் குறித்தும், பாக்கியத்தாயின் செயல்களுக்கு பரிபூரண அனுமதி வழுங்கும் உரிமை பெற்ற பாஞ்சியார் பீடச்சாமிகளின் அருள்வாக்கை தெகிமோலாவிற்கு எதிரான பூர்வீக மொழியில் பெற்று சிறப்பாக பழந்தலைநகர் ஒன்றில் துவக்கி வைத்தாள் பாக்கியத்தாய். அத்தலைநகரை அடைய அவளுக்கென்று ரகசிய சுரங்க வழிகள் அமைக்கப்பட்டன.  அவ்வழிகளில் காற்றோடு காற்றாய் கலந்து மறைந்து விழா நகர் அடையும் மார்க்கம் செய்யப்பட்டிருந்தது. பாதாளங்களில் பழம் கழிவுநீர் வடித்தடங்களையும்.  மேலே உயர் கோபுரங்களையும் கொண்ட அந்நகர், சடங்கை நடத்தவும்,  உலக தெகிமோலா அறிஞர்கள் கூடவும் என பல பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டன. அறிஞரின் பெயராலும், தெகிமோலா பண்பாட்டை நெருக்கமாய் அறியும் பொருட்டும் வந்த தெகிமோலா அல்லாதோருக்கும் நிறைய வசதிகளும், தேசத்தைச் சேர்ந்த தெகிமோலாக்களுக்கென மலிவுவிலை சோற்றுப் பட்டையும், சின்ன சின்ன ஆசைகளால் வடிவமைக்கப்பட்ட கனவுகளும் வழங்கப்பட்டன.

பாக்கியத்தாய் நம்பும் தனது உயிர் பறிப்பு ரகசியத்தை கடத்திவிட்டதான அண்டைதேச தெகிமோலாக்களையும், அவர்தம் தேசத்தையும் இச்சடங்கின் மூலம் பழி தீர்த்து அதுபற்றிய நினைவுகளை ஒரே நாளில் உள்ளூர் தெகிமோலாக்களின் நினைவுகளிலிருந்து அழித்து விடவும், 'உலக தெகிமோலா ஏகப்பிரம்ம பராக்கிரமி'  என்கிற மகுடத்தை சூடிக்கொண்டாள்.  ஆண்டாண்டுகளுக்கு தெகிமோலாவின் வரலாற்றை தலைகீழாக்கி அதன் உச்சியில் ஏறி ஊளையிட்டு மகிழும் அதிகாரத்தையும் பெற்றுக்கெர்ண்டாள். தனது அண்டைதேசத்தின் வரைபடத்தை அழித்து அதன் தெகிமோலா இணைப்பை உலக அளவில் துண்டிக்கும் மார்க்கமாக அந்நாட்டு அறிஞர் பெருமக்களை அழைத்து தனது சிறைக்கதைகளைக் கூறினாள். அவர்களுக்கு தனது உயிரின் ரகசியக்கதை தெரியும் என்பதால் அவர்களை திரும்ப அனுப்பிவைப்பதன் மூலம் - தெகிமோலாவா? பாக்கியத்தாயா? யாருக்கு இச்சடங்கு என தெகிமோலாக்களின் நினைவுகளில் தனது உயிரின் அதிமுக்கியத்துவத்தையும், அதிகாரத்தையும் உள்ளீடாகச்சொறுகி மொழியைவிட தானே பெரிது என நிறுவிக் கொள்வதுமாக இச்சடங்கு துவங்கியது.

'இதன்மூலம் தெகிமோலாக்களின் பண்பாட்டில் மாபெரும் மாற்றம் ஒன்றை தாயானவள் சாதித்துவிட்டாள், அதாவது இனி தெகிமோலாக்கள் மாப்பிள்ளை இன்றியே திருமணம் செய்து கொள்ளலாம், கணவன் இன்றியே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். பல நிறங்களில் எழுதப்பட்ட வெள்ளைக் காகிதமே கன்னிப் பெண்ணிற்கான நல்ல உதாரணம் என இலக்கிய மாற்றங்களைக் கூடச் செய்தது' என்று இச்சடங்கில் கலந்துகாண்ட பிரஞ்சு நவீன பேராசிரியர் ஊடகப்பிறப்பு எரிமோலா அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

இச்சடங்கின் வழமைப்படி, முதல்நாள் தெகிமோலா மொழியை, முடிந்தால் திருமணம் செய்தோ அல்லது இரவுநேர இருட்டுக்களில் கூட்டியோ, கழித்தோ வாழவைத்துவரும் பெரும்புலவர்கள் தங்களது பழம்புரவிகளில் ஏறி கையில் சிற்றிடைத்தவழ தங்களது மொழிக்கன்னிகளை தூக்கிக்கொண்டு பாக்கியத்தாய் நாமாவளி பஜனையை பாடித் துவங்கி வைத்தார்கள். நடுநாயகமாக அமர்ந்து தெகிமோலாவின் மொழித்தெறிப்புகளை விழுங்கி வீங்கத் துவங்கினாள் தாயானவள்.  இவ்வீக்கமே சடங்கை சரியான திசையில் நடத்திச் செல்வதற்கான சகுனமாகும் என்பதை உணர்ந்தே, தலைமைப் பூசாரியாக தாயால் நியமிக்கும் பாக்கியம்பெற்ற சோமா பயலிவான் முன்னேற்பாடாக இதனை செய்திருந்தார். அதன்பின் அறிஞர்கள் தங்களது கைகளில் மொழியால் ஆன வாளும், வில்லும், அம்பும், ஏ.கே. 47-ம் ஏந்தியோ அல்லது பூவோ, செடியோ, மண்ணோ, கல்லோ, 'கம்யூட்டர் டிஸ்கோ'  ஏந்தி குரவை ஆடியபடி தாயை சுற்றிச்சுற்றி வரவேண்டும். இந்த நான்கு நாள் சுற்றலில் தெகிமோலாக்கள் அனைவரும் 'தாயே! தாயே!' என அலறி மயக்கம்போட்டு விழுந்து கொண்டிருக்க வேண்டும் அதுவே சடங்கிற்கு கிடைத்த தெய்வ சம்மதமாகும்.  இதனிடையே தெகிமோலா பண்பாட்டை விளக்கும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்கள் ஒருபுறமும் நவின 'புஸ் புஸ்' உணவுப் பண்டங்கள் ஒருபுறமுமாக நடந்த இசச்டங்கை சிலப்பதிகார ஆயர் இடைச்சேரியின் குரவைக் கூத்துடன் ஒப்பிடுகிறார் ஒரு தெகிமோலா புலவர்.

இறுதிநாள் - அன்றுதான் சடங்கின் உச்சநிலை எய்தப்படுகிறது. அதற்கென பிரத்யேக மணிமண்டபங்களும், கூடகோபுரங்களும் கட்டப்பட்டு எந்தவித தீட்டு தொடக்கு அனாச்சாரங்களும் இல்லாமல் குளித்துமுழுகி காலைப்பனிப்போல், தும்பைப் பூப்போல் தூய்மையாய் எல்லோரும் மண்டபத்தை அடைந்து சிறப்பாக அழைக்கப்பட்ட அந்நிய தேச ஆட்சியாளர்கள் எல்லோரும் ஒன்று கூடி நிற்க நடுவில் அன்று மலர்ந்த மலராய், தாமரையில் வீற்றிருக்கும் சரசுவதியாய் (வர்ணனை அனைத்தும் பாக்கியத்தாய் நாமாவளி பஜனையில் கிடைத்தவை) உலகை உய்விக்கும் மகாசக்தி சொரூபமாய், தனது விரிவடையும் பிரபஞ்சக் கோட்பாட்டின் யதார்த்த உருவாய் உள்ள நவீன தாய் தெய்வமான பாக்கியத்தாய் ஒரு உயர்ந்த ஆசனத்தில் வீற்றிருக்க தெகிமோலாக்கள் அனைவரும் நெருக்கியடித்துக்கொண்டு செத்துக்கொண்டிருக்க, சடங்கு தன் இறுதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. தாயின் முன் சிறிய தெகிமோலா அச்சரங்களை அடிப்பாகமாகவும், 3000 வருட சரித்திரத்தை வளைத்தும், இலக்கியங்களை வாய்ப்பகுதியாகவும் கொண்டு செய்யப்பட்ட கூஜா ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் அறிஞர்கள் ஒவ்வொருவரும் தங்களது பெயர்களை எழுதிப்போட்டும், தெகிமோலாக்கள் ஒவ்வொருவரும் தங்களது நினைவுகள் அத்தனையும் அழிக்கப்பட்டு தாய் ஒன்றையே மனதில் நிறுத்தி சுற்றிச்சுற்றி மந்திர ஆட்டம் ஆடி தங்களது வலிநிறைந்த மூளைகளை பிய்த்து அக்கூஜாவிற்குள் போட்டபடியும் நகர்ந்து கொண்டிருந்தனர். ஆச்சர்யங்களில் எல்லாம் ஆச்சர்யம் அக்கூஜா அத்தனை மூளைகளையும் தனது வாய்க்குள் புமியை உண்ட கண்ணனைப் போலவும், கடல் நீர் அத்தனையும் குடித்த அரக்கனைப் போலவும் அமைதியாக இருந்ததாக சமீபத்திய உக்கிரநல்லூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருப்பதாக டோக்ரிஸிய அய்வாளர் குறிப்பிடுகிறார்.

இக்கூஜாவில்தான், தெகிமோலாக்கள் நம்பும் அம்மொழியை, உயர்ந்த இடத்தின்மீது அமர்ந்து தொலைத்தொடர்பு காட்சிகாண் எந்திரம்மூலம் பரமசிவ-பார்வதி திருக்கல்யாண வைபவத்தை பார்த்துக்கொண்டே உருவாக்கிய ஒன்றரையடி முனி தனது கைகளில் ஒரு ஆற்றை நிரப்பி வைத்திருந்ததாகவும் அதன்பின் தெகிமோலாவின் மீது பற்றுக்கொண்ட காகம் ஒன்று அதனை தட்டிவிட்டதாகவும் சிலவேளை அக்காகம் நதி உற்பத்தி ஸ்தானத்தைச் சேர்ந்த பாக்கியத்தாயாகவும் இருக்கலாம் எனவும் பழஞ்சுவடிப் புராணங்கள் வழியாகவும், வாய்வழியாகவும் சொல்லப்பட்டுவரும் ஒரு கதை ஒன்று நிலவி வருகிறது அத்தேசத்தில்.

சடங்கின் இறுதி நடவடிக்கையாக, அக்கூஜாவை அறிஞர்கள் அனைவரும் ஆளுக்கொரு கையாகத் துக்கி பாக்கித்தாயகப்பட்டவளின் வாயில் வைத்து விழுங்கும்படி செய்தனர். அதனை விழுங்கிய தாய் ஒருபெரும் ஏப்பத்தின் மூலம் மொத்த தெகிமோலாக்களின் மோட்சத்தையும், நல்வாழ்வையும், அம்மொழியின் எதிர்கால, நிகழ்கால, இறந்தகால கதிகளையும் தீர்மானித்து கதிமோட்சமடையச் செய்தாள். இவ்வாறாக, தனக்கு எதிரான பில்லி, சூன்ய, கெட்ட ஆவிகள் மற்றும் எதிரிகள், வேண்டப்படாதவர்கள் ஆகியோரின் சாம்ராஜ்யத்தை முறியடித்து தெகிமோலா மூதாதைகளின் பலம்பெற்று இன்னும் நீண்ட நாட்கள் ஆளும் வலுபெற்றாள். தெகிமோலா மொழி மறக்கடிக்கப்பட்டதை ஒப்பிட இச்சடங்கு உருவாக்கும் மயக்கத்தின் ஆற்றலை கணக்கிட்ட பிறகு இறுதிநாள் அன்று மொத்த தெகிமோலாக்களும் தாயால் எழுப்பப்பட்டு மீண்டும் புதிதாய் பிறந்தமேனிக்கு அனுப்பப்படுவார்கள். இனி அவர்களுக்கு நீண்ட நீண்ட வாக்கியங்கள் புரியாது, சின்ன சின்ன வாக்கியங்கள் எல்லாவற்றிலும் தாயின் பெயர் ஒட்டு இருப்பவையே புரியும். இச்சடங்கு இனிதாக நடைபெற்றதை கேட்ட கருணாகரத் தொண்டமானின் இருந்த ஒரு நிழலும் செத்து விழந்தது. அதன் சாவில் பிறந்த சத்தமானது இவ்வாறாக இருந்தது, ”மானமுள்ள தெகிமோலாக்களுக்கு மாபெரும் தலைக்குனிவு”.

கேளும்! வாசகரே! இப்படியாகத்தான் தெகிமோலாக்களின் மொழிச் சடங்குகளை நடத்தி பலம்பெற்ற ஆளும் மார்க்கத்தின் வரலாறு நடைபெற்றுவருகிறது. நீயும், நானும்தானே இதன் நித்திய சாட்சிகள். அம்மார்க்கம் தப்ப ஒரு வழிகூறும் அய்யா! இல்லாவிட்டால் எனக்கு எதிராக, பிடிக்காதவனைப்பற்றி வரலாற்றை திருப்பி எழுதி காழ்ப்புணர்ச்சி தீர்ப்பதாக புகழ்பெற்ற தெகிமோலா வசனத்தை பொழியாதீரும்.  கூறும் வாசகரெ! எங்கே போனது நமது கூறுகள்? வரலாற்றின் சாட்சிகளாய் ஆகிப்போன அவலத்தைப் பாரும். எமக்கு பிடிக்காவிட்டால் நீர்! வரலாற்றைக்கூட மாற்றுவீர். அல்லது வரும் ஆய்வாளனை திருப்பி அனுப்பும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர். இரும் இரும் ஒருநாள் வரும்... என்று 3000 வருடமாய் காத்திரும்.

வாசகா! ஏற்கனவே, தெகிமோலா சரித்திரத்தை தமிழவனின் “சரித்திரத்தில் படிந்த நிழல்களில்“ படித்திருக்காவிட்டால், வரலாற்றில் அக்கறையும், வாய்ப்பும் இருந்தால் இனியாவது அதை படி.. இக்கதையை கேட்டும், படித்தும், சொல்லியும் சுகப்பட்டு தொலைந்தால் அனைவருக்கும் எட்டு யானைபலம்கூடி, இரவில் குஷ்பு பங்குபெறும் கனவு ஒன்று “ஆண்டவன்“ ஆள்பவன் ஆளப்போகிறவன் அருளால் கிடைக்க அருள் புரிவதாகுக! ஆமின்.

- காலக்குறி. (காலம்-1 குறி-5) ஜனவரி-95.

Thursday, February 21, 2008

தன் கணவன் தன் சுகத்தி்ல் தன்மனம் வேறானதுபோல்

தன் கணவன் தன் சுகத்தில்
தன் மனம் வேறானதுபோல்
- பொதிகைச்சித்தர்

இது ஒன்றும் புதிதில்லை நண்பா
பொதுதான் எல்லாத்துக்கும்.

'பெட்டைப்புலம்ப' லென்பான் பாரதி
'நபும்சக கோப' மென்பான் பித்தன்

மனிதாபிமானங் கசியக் கசியக் கவிதை பண்ணும்
அவனுக்கு வாய்த்த ஜீவனோபாயமோ
லேவாதேவி.
கதைபண்ணும் இன்னொருத்தனுக்கோ
காக்கிச்சட்டை.
கூலிக்கு மாரடிததுக் கோழிமுட்டை மயிர்புடுங்கி
என்னம்மோ ஒரு எழவு உத்தியோகம்
அவனவனுக்கும்.

மொழிபெயர்தேயச் சஹாராக்களில்
அடகுபோன ஜீவிதத்தால்
இளமையில் காயும் சகஜீவிகள்.

எதைஎதை எல்லாம்
குப்பை செத்தை பார்த்தீனியம் என்பேனோ
அதை அதையே புத்தகம் என்பதாய்
விற்றுத் தொலைத்தும் வாடகைக்கு விட்டும்
குப்பை கொட்டும் நான்.

மறுதலிக்கப்பட்ட அப்பிரதிகளை வெளியிட
ஆண்விபச்சாரிகம் பண்ணும் அவன்
எழுத்துச்சோரம் போகும் இன்னொருத்தன்
அட இப்படி எதுவானால் தானென்ன
நமக்கு விதிக்கப்பட்ட ஜீவனோபாயம்.

நம்மைப்போலவே இப்படித்தான் நண்பா
நமதந்தச் சக மனுஷிக்கும்
கதியேதுமின்றி விதிக்கப்பட்ட ஜீவனோபாயமாய்

இது ஒன்றும் புதிதில்லை நண்பா
பொதுதான் எல்லாத்துக்கும்

துணையோடு புணரும்போது
மனபிம்பம் வேறுவேறாகும்.
(காலக்குறி:ஜன - 96)

Friday, February 1, 2008

வாசிப்புச் செயல்பாட்டின் தீவிரத்துக்காகத் தேர்வு செய்த எழுத்துக்களின் தொகுப்பு

june22-title

வாசிப்புச் செயல்பாட்டின் தீவிரத்துக்காகத் தேர்வு செய்த எழுத்துக்களின் தொகுப்பு

உங்களுடன்... 'இந்தியச் சந்தையைப் பிடித்து விட வேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சி கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பித்து இருபத்தோராம் நூற்றாண்டில் நிறைவேறிவிட்டது. கிளிண்டனின் வருகை இதை உறுதி செய்துவிட்டது' என்று தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டு வெளிவந்துவிட்டது, காலக்குறி மே - ஜீலை 2000 இதழ்.

நேர்த்திமிக்க அச்சமைப்பில் நவீன ஓவிய பிரக்ஞையில் அட்டைப்படம் வெகு ஈர்ப்புடன் ஆர்வம் ஏற்படுத்தும் விதத்தில் 'காலக்குறி' அமைந்துள்ளது.

சுமார் 114 பக்கங்களில் வாசிப்புச் செயல்பாட்டின் தீவிரத்துக்காகத் தேர்வு செய்த எழுத்துக்களின் தொகுப்பு 'காலக்குறி'.

'மனக்கோட்டையின் அலைவுறும் மனித உடல்கள்' எனும் தலைப்பில் ஜமாலன், நவீன தமிழ்ச் சிறுகதையில் மெளனி பதித்த தடங்களின் புனைவு வெளியின் வாசிப்புச் சாத்தியங்களை, வாசிப்பின் அரசியலை முன் வைத்துச் செல்கின்றார். நமது வாசிப்பின் மீதான ஓர் மறு வாசிப்பைக் குறுக்கீடாக நிகழ்த்தி விடுகின்றார்.

- சி. சிவசேகரம் லத்தீன் அமெரிக்க இலக்கிய, நிக்காரகுவாவின் போராளி விவசாயக் கவிஞர்களின் கவிதைகள் மூலம், தமிழ்ச் சூழலின் படைப்புத் தளத்தில் ஓர் எதிர் வினையை நிகழ்த்துகின்றார். தமிழ்க்கவிதையின் இயங்குதளம் எதனை நோக்கிச் செல்கிறது என்பதனை நமக்கு உணர்த்திச் செல்லும் பண்பாட்டுப் பரிவர்த்தனையையும் நிகழ்த்தியுள்ளார்.

- கமலின் ' ஹே! ராம்' இந்திய, தமிழக சமூக வெளிக்குள் நிகழ்த்தும் முரண்கள், கருத்தியல்கள் குறித்த சில கேள்விகளை எழுப்பிச் செல்கிறது.

- மார்க்சிய விமரிசகர் என அறியப்பட்ட கோ. கேசவன் 'பின் நவீனத்துவத்தின் தத்துவமும் அரசியலும்' எனும் தலைப்பில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி பிரதி வடிவில் அமைந்துள்ளது.

கேசவனின் தத்துவ உரையாடல் பின்புலத்தில் 'பின் நவீனத்துவம்' குறித்த அவரது வாசிப்பும் புரிதலும் இடம் பெற்றுள்ளது.

இவற்றினூடே 'கேசவன் போன்ற' தோழர்கள் பின் நவீனத்துவம் போன்ற சிந்தனைகளை எதிர்கொள்ளும் நிலைமைக்கு ஓர் மாதிரித் தன்மை யாவும் இந்த உரையில் இருக்கிறது.

- 31-வது உலகத் திரைப்பட விழா குறித்த குறிப்புகள், முதல் தமிழ் ஆவணத் திரைப்பட விழா குறித்த நிகழ்வுப் பதிவுகள், இயக்குநர் அருண்மொழியின், 'சில பணிகளும் சில கேள்விகளும்', 'சினிமா' குறித்த அக்கறையையும், அவை சார்ந்த உரையாடலையும் எதிர்பார்த்ததன் நிமித்தம் இடம் பெற்ற பகுதிகள் எனலாம். கவிஞர் அபியுடன் ஒரு நேர்காணல். இவை கவிதை, தமிழ்க்கவிதை, தமிழில் கவிதை என்ற அபியின் பார்வையினூடே வெளிப்படும் சிதறல்கள்.

முருக பூபதியின் 'வனத்தாதி' நாடக நிகழ்வின் பதிகை நிகழ்வுப் பதிவு - 2 ஆக இடம் பெற்றுள்ளது. அடுத்து 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' நாவல் விமரிசனக் கூட்டத்தின் நிகழ்வுப் பதிவு - 3 ஆக இடம் பெற்றுள்ளது.

- கென்ய அறிஞர் கூகி வா கியாங்கோவின், 'ஆப்பிரிக்க இயக்கத்தின் மொழி' என்ற பரப்பில் கூகியின் சிந்தனை பதிவு செய்யப்பட்டுள்ளது. காலனிய ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளில் மொழியின் இடம் எத்தகையது என்பது தனித்த வரலாற்றுப் போராட்டம் கொண்டது. மொழி பண்பாடாக எவ்வாறு உள்ளது என்பதைக் கூகி சொல்கிறார். தமிழிலும் பண்பாடாக மொழி உள்ளதை நாம் காணலாம். மொழி வழித் தேசியம் இந்த நூற்றாண்டில் வளர்ந்து மறு நோக்கில் இன வரைவியல் சார்ந்த எழுத்து முறைக்கு, புதிய மொழிச் சிந்தனைக்கு எவ்வாறெல்லாம் ஆட்பட்டு வருகின்றோம் என்பதெல்லாம் நமக்கு நிதர்சனம்.

இதனை விரிவாகப் புரிந்து கொள்ளும் பாங்கில் கூகியின் சிந்தனை அமைந்துள்ளது. தமிழ் பயிற்று மொழி வேண்டி போராடும் நேரத்தில் இது போன்ற கட்டுரைகளின் வருகை தமிழ்ச் சிந்தனைக்குப் புது வளம் தரட்டும். வழக்கம் போல் புத்தக விமரிசனங்கள். ஆக 'காலக்குறி' நாம் வாழும் கால வெளியைக் கடக்க முற்படுவதற்கான அல்லது நாம் வாழும் காலத்தைக் குறி வைத்து உணர்த்திச் செல்லும் விதத்திலான இதழ்.

மூன்றாம் உலகைச் சார்ந்த சிந்தனைகளின் படைப்பு, உத்வேகங்களின் படைப்பு, உத்வேகங்களின் பெறுமானங்கள் ஆகியவை தமிழில் ஊடாடி வர சாத்தியங்களைத் திறந்துவிடும் இதழ் காலக்குறி.

காலக் கிரமமாகக் 'காலக்குறி' வருகை தர வேண்டும். தமிழுக்குப் புது வளங்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.

- ஆதி

குறிப்பு: இவ்விமர்சனம் ஆறாம்திணை என்கிற இணையதளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்படுகிறது. காலக்குறி பற்றிய பல பார்வைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இது இங்கு பதியப்படுகிறது. நன்றி ஆறாம்திணை மற்றும் எழுதிய ஆதி அவர்களுக்கு. 

Friday, January 18, 2008

தலையங்கம் (காலக்குறி)

அமுக்கப்பட்டும் kalakuri-jan-96ஒடக்கப்பட்டும் கிடக்கும் மூன்றாம் உலகின் கலைஇலக்கியக்குரலுடன் வெளிவருகிறது காலக்குறி. இன்றைய உலகின் புவிசார் அரசியல் (Global Politics) என்பது, ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளின் எண்ணை வளங்கள், இயற்கை வளங்கள் மற்றும் மனித வள ஆற்றலை சுரண்டி தங்கள் சமூகங்களின் நெருக்கடிகளை தீர்த்து சுகபோகமான வாழ்வை நடத்த போர்களையும், வன்முறையையும் நம் மண்ணின் மீது நிகழ்த்துவதாக உள்ளது. நமது வளங்களை கொள்ளையிட்டு, மேலும், மேலும் தங்களை பலம் பொருந்தியதாக மாற்றிக் கொள்ளவும், உலக அளவில் பதற்ற நிலையை உருவாக்கி அதில் குளிர் காயவும் மத அடிப்படைவாதம், இனவாதம், பயங்கரவாதம் என்ற பெயரால் ஒரு மனித அழிப்பு விளையாட்டை மூன்றாம் உலக மக்களாகிய நம் மீது நடத்தி வருகின்றன.

நமது மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக்கப்பட்டு சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்டு எல்லைகளில் நிற்கும் வண்ண வண்ண காட்சிகளாக டி.வி. சானல்களில் பார்க்கப்படவேண்டிய கஹிலின்(1) கார்ட்டூன் காட்டும் "Poor Creatures" -களைப்போல கேலிச்சித்திரங்களாக இருத்தப்பட்டுள்ளார்கள். இந்த அழிவுகள் காலனீய நாடுகளைச் சுரண்டி மூலதனத்தை குவித்துக்கொண்டு, மேற்கத்திய நாடுகள் தங்களை உலக முதலாளிகளாக - ஏகாதிபத்தியங்களாக உருவாக்கிக்கொண்ட காலத்தில் துவங்கி... இன்று உலக வளர்ச்சிக்கான தியாகமாக உருவமைக்கப்பட்டு நிகழ்த்தப்படும் ஒரு அவல நாடகமாகும். மூன்றாம் உலக மனிதர்கள் உள்ளூர் அதிகார வர்க்கங்களால் கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்பட்டு, நகரங்களிலும், கிராமங்களிலும் அழிக்கப்படுவதும் - வறுமையின் கோரப்பிடியில் பட்டினிச்சாவுகளாக கிராமம் கிராமமாக மறைந்தொழிவதுமாக உச்ச நிலையில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதற்கு மனித அழிவை தங்களது மையமாகவும், இறுதி தீர்ப்பாகவும் வைத்துள்ள மதங்கள், ஒருவித நியாயப்பாட்டை வழங்கி வருகின்றன. தங்களது அறவியல் மூலம் மனித அழிவிற்கான காரணங்களை தனிமனித பாவ-புண்ணியங்களுடன் இணைத்து, ஒவ்வொரு தனிமனிதனிடமும் குற்றமற்ற உணர்வுகளை உருவாக்கி உள்ளன.

இந்த கருமேகம் சூழ்ந்த அரசியல்-மத ஆடகளத்தில் - இலக்கியம், வாழ்க்கை, தத்தவம், அரசியல் எல்லாம் தங்களது தடைச்சுவர்களை உடைத்து ஒன்று கலந்து பீறிட்ட நிலையில், அனைத்துவகை இழிவுகள், ஒடுக்குமுறைகள், வன்முறைகள், நாகரீகம் என்ற பெயரில் நிகழும் கலாச்சார அழிப்புகள் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு புதிய உணர்ச்சிமிக்க, உத்வேகம் கொண்ட மொழியாக மூன்றாம் உலக கலை-இலக்கியம் ஆதிக்கச் சக்திகளை எதிர்கொள்ளத் துவங்கியுள்ளன. அடையாளம் மறுக்கப்பட்டவன் தன் அடையாளத்தை சத்தமிட்டு கூவுகிறான் கவிதையாக, கதையாக... ஒடுக்குமுறைக்கு எதிரான கலகமாக மாற்றுகிறான் எழுத்தை. இங்கு இலக்கியம் ஆயுதமாக மட்டுமின்றி வாழ்க்கையாகவும் பரிணமிக்கிறது. ஈகோ கூறியதுபோல புனைவுகளினை உருவாக்க அமைந்ததைப் போலவே அமைந்திருக்கிறது வாழ்க்கை.

சிதறிக்கொண்டிருக்கும் மூன்றாம் உலக கீழைத்தேய நாடுகளுக்கும், ஒருங்கிணைந்து கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் சிக்கியிருக்கும் இன்றைய மனித நிலையை, அதன் அவலத்தை, எழுச்சியை பாடபொருளாக கொண்டிருக்கும் இவ்விலக்கியம் தனது சுயத்தை நோக்கியதாகவும், அதேசமயம் மறுக்கப்பட்ட வளர்ச்சியை உள்ளடக்கி மேலெழும்புவதாகவும் உள'ளது. இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய இலக்கியவாதிகள் அனைவரும் மூன்றாம் உலகைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விலக்கியங்களின் கலையியல் வடிவங்களை, முயற்சிகளை அங்கீகரித்துவிட்டு, அவற்றின் அரசியல் உள்ளடக்கங்களை புறக்கணிக்கவும், மறுக்கடிக்கவும் முயலும் மேற்கத்திய போக்கிற்கு இவை ஆளானபோதிலும், இன்று நவீன சிந்தனையாக சொல்லப்பட்டவற்றுடன் இவ்விலக்கியங்கள் இணைபோக்கை கொண்டிருப்பதன் மூலம் தவிர்க்கவியலாத அங்கீகரிப்பைப் பெற்றுள்ளன.

அங்கீகாரம் தேடுவது அடிமையின் வேலை - என்பதை உணர்ந்து, எல்லாவித அங்கீகரிக்கப்புகளையும் மறுக்கும் அடிப்படையைக் கொண்டவை இவைகள். நிறுவனமயமாதலுக்கு வெளியே தங்களது இயக்கத்தை வலுவுடன் நிகழ்த்தி வருகின்றன. எகாதிபத்தியம் உருவாக்கும் நாகரீகம் பற்றிய நினைவுகள், வளர்ச்சி பற்றிய கனவுகள், உலக வரலாறு, சுய வரலாற்றுக் கதையாடலை மறந்து போதல் என்கிற போதையிலிருந்து விடுபட்டு, நினைவுகளும், அதன் அடிப்படையிலான கனவுகளுமான ஒரு மொழிநடையில் இவ்விலக்கியங்கள் அழிக்கப்பட்ட நினைவுகளைத் தேடிய பயணமாக நகர்கின்றன.

எந்தவொன்றும் ஒரு கால - வெளிக்குள்ளேயே இருத்தலடைகிறது. அல்லது அர்த்தமுள்ளதாகிறது. காலம் என்பது மேற்கத்தியத்தைப்போல வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதான நேர்க்கோட்டுத்தன்மை கொண்டதல்ல. ஒரு கீழைத்தேயனுக்கு காலம் என்பது வளர்ச்சி, வீழ்ச்சி, மந்தம் என்பதாக திருகிச்செல்லும் சுழற்தன்மை (Spiraling) வாய்ந்ததாக இருக்கிறது. நாளை மீண்டும் ஒரு நேற்றாக மாறுவதும், இன்று மீண்டும் ஒரு நாளையாக வருவதுமான சுழற்சி என்பதே நமது காலமாக உள்ளது. இப்படியாக நமது சரித்திரம், கலை, இலக்கியம் எல்லாம் என்பதுவே நமது காலமாக உள்ளது. இப்படியாக நமது சரித்திரம், கலை, இலக்கியம் எல்லாம் ஒரு திருகின் (Spiral) மேற்கண்ணியென விரிந்த நிலையில் திரம்பவரலாக (Repetition) நிகழ்கிறது.

சமச்சீரற்ற வளைக்கப்பட்ட வெளியையும், சுழற்சியான காலத்தையும் கொண்ட நமது அறிதலில் நேர்க்கோட்டுத் தன்மையானதுமான வளர்ச்சி பற்றிய கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக திணித்தததன் மூலம், ஏகாதிபத்தியங்களின வேட்டைக்காடாக மாற்றப்பட்டு, இன்றுவரை சூரையாடப்பட்டு வரும் வாழ்க்கையாக இருந்து வருகிறது நம் உலகு. இந்த வளர்ச்சியின் வன்முறையை மறுக்கும் நமது இலக்கியங்கள் - வீழ்ச்சியை, நாகரீகத்தை, பகுத்தறிவை இன்னபிற மேற்கத்திய தர்க்கங்களை கிண்டலடிப்பதும், அவற்றின் ஒடுக்குமுறையை வெளிப்படுத்துவதுமாக உருவாகுகின்றன. இங்கு சுயமான நமது நாட்டுப்புறக் கதையாடல் என்பது சுழன்று வந்து, காலத்தின் தேவையாக, நவீன எழுத்து முறையாக உட்காருகிறது. நாம் பல கதைசொல்லிகளையும், பாட்டிகளையும் நவீன மொழிக்குள் உலவவிட்டு பகுத்தறிவின் உச்ச வன்முறையை செயலிழக்கச் செய்கிறோம். பல அற்புதக் கதைகள், புனைவுகள் அவை கட்டமைக்கும் புலன் உறுப்புகள் மூலம் மகிழ்வின் தளம் ஒன்று விரிக்கப்படுகிறது. நமது நினைவுகள் காலத்தில் பின்னோக்கி திருப்பப்படுவதன் மூலம், காலனிக்கு முந்தைய நமது உடலை, புலன்களை கண்டெடுக்கும் செயல் நடைபெறுகிறது. இவ்வாறாக புதைக்கப்பட்ட மூதாதைகளின் பேய்ச்சிரிப்புடன் கிளர்ந்தெழுகிறது மூன்றாம் உலக இலக்கியம் - எல்லா நிர்மாணங்களுக்கும் உலகின் அங்கீகரிக்கப்பட்ட தர்க்க முறைக்கும் எதிராக.

தமிழ்ச்சூழலில் வாசக உள்ளாடைகளை குறிவைத்து நடத்தப்படும் வார, மாத மற்றும் தீபாவளி, பொங்கல் சிறப்பு மலர்கள் உள்ளிட்ட கழிசடை பத்திரிக்கைகளின் மூலம் வெகுசன எழுத்தாக அறியப்பட்டுள்ளவை உருவாக்கி இருக்கும் வாசக - எழுத்தாளர் உறவானது "Seductive Level' -லான ஒரு மகிழ்வு வெளிக்குள் நடைபெற்றுவருவதால், சிறுபத்திரிக்கை வட்டங்களின் உறவானது "Intellectual Level" -லான ஒரு குழுசார் வெளிக்குள் நிகழ்வது தவிர்க்கவியலாததாகிறது. முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு எல்லாம் தற்போக்காகி தலைவிரித்தாடும் நிலை. அங்கீகாரத்தை நோக்கி தங்கள் உணர்வு உறுப்புகளை நீட்டிக்கொண்டு ஆமையாய் நகரும் சிறபத்திரிக்கைச் சிந்தனையாளர்கள்.

(1) - கஹில் - Khahil ..... ArAb News தினசரியில் ஒரு Cartoonist.

- காலக்குறி (ஜனவரி 1996)

குறிப்பு: ஜனவரி 1996-இதழ் காலக்குறி தலையங்கம்.

Sunday, January 13, 2008

திருடப்பட்ட விலா எலும்பு

Weeping Woman Pablo Picasso

கடவுள்களுடனான என் விளையாட்டு
நேற்றுடன் முடிந்துபோய்விட்டது.

பிறைசூடி,
சூலம் தரித்து,
சிலுவையை சுமக்கும் மனிதனே
இனி
என் வீட்டுக் கதவைத் தட்டாதே!

மானுடம் வெளிறிய வெளியில்
செருகப்பட்ட குறிகளின் முனையில
குறியிடப்பட்ட உடல்கள் தொங்கவிடப்பட்டிருந்தன
எதற்காய் பலியிடப்பட்ட உடல்கள்?


மனிதனைக் கரைத்திடும
குறிகளின் செல்கள்...... குருதியில்
விசைத்தறிக் களத்தில
வீசியெறிந்த சிக்கல் நூற்களாய
கடவுளின் சன்னிதானத்தில
என் உடல் நரம்புகள்.....

சகமனிதனின
ரத்தம் சிதறிய நிலத்தில
கால்படுவதை விரும்பவில்லை.

கடவுள்களுடனான என்விளையாட்டு
நேற்றுடன் முடிந்துபோய்விட்டது.

புண்ணிய செயல்களுக்கு
இப்பூமியில் கிட்டா சொர்க்கம
வேறெங்கும் கிடடிதான்...... என்ன?

மனவெளியில் புழுங்கும்
கொடூரங்களைக் கொன்றொழிக்க
இதம் வேண்டி இதம் வேண்டி
என் புலன்கள்
நிலத்தைப் பிறாண்டி பிறாண்டி
பூமியின் வயிற்றைக் கிழித்தபோது,
வாழ்க்கையின் சாட்சியாய் கிடைத்தது
விலா எலும்பற்ற ஆதிக்குடியின் கூடு ஒன்று....

கோடி கோடி வருடங்களுக்கு முன்
அந்த விலா எலும்பை திருடியது.....
நீயா?
நானா?
கடவளா?

-அ.ஜ. கான்.
காலக்குறி - ஜன.-96

Art: "Weeping Woman Pablo Picasso"

அறிமுகம்

1993-ல் சவுதிஅரேபியா தலைநகரான ரியாத்தில் எழுத்தின் தீவிர வேட்கையுடன் தனியாக நடத்தப்பட்டுவந்த 'அறிவின் தொல்பொருளியல்' என்கிற கையெழுத்து பத்திரிக்கை அதை அப்படிக்கூட சொல்லமுடியாது தானே எழுதி தானே படித்துக்கொள்ளும் ஒரு சுயமோக வேட்கையாக எழதப்பட்டதே அது. சினிமா விமர்சனம் துவங்கி நீலப்படம் பற்றிய கட்டுரைகள் என மொத்தம் 4 கட்டுரைகள். அதன்பின் பால்யகால நண்பனாக துவங்கி ஒத்த கருத்துடன் இயங்கிவந்த அ.ஜ.கான் வந்து சேர்ந்தான். அவனது முன்முயற்சியில் துவங்கப்பட்டதே காலக்குறி.

முதல் இதழ் நகலச்சு இதழாக மார்ச்சு 1994-ல் வெளியடப்பட்டது. 10-பிரதிகள் மட்டுமே. இந்தியாவில் உள்ள இலக்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைப்போம். சவுதி அரேபியாவில் கிடைத்தவற்றை வைத்து எழுதுவதும் மொழிபெயர்ப்புகளும் என ஆரம்பித்து ஒரு சில நண்பர்களின் எழத்துக்கள் இந்தியாவில் இருந்து வந்தவை என காலக்குறி தொடர்ந்து 7 இதழ்கள் நகலச்சாக ரியாத்திலிருந்தும் 8-வது இதழ் முதலாக அ.ஜ.கானை ஆசிரியராகக் கொண்டு அச்சில் சென்னையிலிருந்தும் வெளிவந்தது. 14-வது இதழ் ஜனவரி 2002-ல் வந்தது. அதன்பின் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதனை முறையாக வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதி அல்லது 2009-துவக்கத்தில் அதனை முறைப்படுத்தி வெளியிடலாம் என உள்ளோம்.

இதுவரை வந்துள்ள இதழ்களை இங்கு பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது. பரவலான வாசகர்களை சென்றடையும் நோக்கம் மட்டுமின்றி இதனை பதிவேற்றுவதன்மூலம் எதிர்காலத்தில் காலக்குறி தனியான ஒரு இணையப்பக்கத்தை துவக்குவதற்கும் பயன்படும் என்பதாலும் தொடர்ந்து காலக்குறியில் பிரசுரித்த எழத்துக்கள் வெளியிடப்படுகிறது.

ஆலொசனைகளும் கருத்துக்களும் வறவேற்கப்படுகிறது. இவை காலக்குறியை முறைப்படுத்திக் கொண்டுவர பயனுள்ளதாகவும் காலக்குறியின் உள்ளடக்கங்கள் பற்றிய ஒரு சுயவிமாசனமாகவும் அமையலாம்.

அன்புடன்
ஜமாலன்.